சேரர்களின் வம்சமான மலையமான்களின் பார்க்கவ வம்சத்தில் மலையமான்,நத்தமான்,சுருதிமான் என்று மூன்று பகுப்புகள் உள்ளது. குல முதல்வராக தெய்வீகனின் புராணம் கூறப்படுகிறது. பாரி மகளிரை தெய்வீகன் மணந்ததாக கூறப்படுவதற்கு ஆதாரங்கள் அநேகம் இருந்தாலும் அதே தெய்வீகனது மக்களாக கூறப்படும் நரசிங்க முனையரையர்,மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமான் குலசேகரன் இவர்களின் காலம் கி.பி ஏழு முதல் எட்டாம் நூற்றாண்டுகளுக்குள் உள்ளது.
மேலும் இம்மூவரும் சகோதரர் என்று கூறப்பட்டுள்ளது. சகோதரர் என்று கூறும் போது மூவரும் ஒரே வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் என்பதே உண்மையாகும். தெய்வீக ராஜனின் காலமும் இவர்களின் காலமும் வேறுபட்டாலும் தெய்வீகன் மலையமான் நரசிம்ம உடையானின் பார்க்கவ வம்சத்தின் வம்சாவழியில் வந்தவர்கள் தான் இவர்கள் மூவரும் என்ற தகவலை பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தெய்வீக ராஜன் பற்றிய செப்பேடு உறுதி செய்கிறது.
மேலும் நாயன்மார் இருவர் சேதிநாட்டில் ஒரே கால கட்டத்தில் ஆண்டதனாலும் சைவ சமயம் சிறந்து விளங்கிய கால கட்டத்தில் மெய்ப்பொருள் மன்னர்,நரசிங்க முனையரையர் இருவரது பெருமையும் கொண்டாடப்பட்டது. ஆகவே சுருதிமான் குலசேகரர் பற்றிய தகவல்கள் ஓரளவே காணப்படும்.
அதில் அவர் சுருதிகள்(வேதங்கள்)பல கற்றவர். பாண்டியன் மகளை மணந்தவர். எல்லா வித்தைகளிலும் சிறந்தவர். பக்தியின் பாற்பட்டு நாட்டைத் துறந்து தேசாந்திரம் சென்றவர். என்பன போன்ற குறிப்புகள் காணப்படும்.
சுருதி என்பது வேதத்தை மட்டுமல்லாது ஆதி,பண்டைய,மூலம் என்ற பொருளும் உடையது.ஆகவே தான் சுருதிமான்கள் இக்குலத்தின் ஆதி மூலமான முதன்மையானவர் என்ற பொருளுடைய மூப்பனார் என்ற பட்டம் உடையோர் ஆனார்கள்.
மெய்ப்பொருளார் மற்றும் நரசிங்க முனையரையர் பற்றிய குறிப்புகள் பெரிய புராணம் வாயிலாக கிடைத்துள்ள நமக்கு குலசேகரர் பற்றி ஏதும் குறிப்புகள் இல்லாமல் போகவில்லை. சைவ மதப்பற்றால் மறைக்கப்பட்டுள்ளது. சைவம் ஓங்கியிருந்த அக்காலத்தில் வைணவ ஆழ்வாரான குலசேகரர் அடையாளம் காட்டப்படாமல் பொதுவாக சுருதிமான் குலசேகரர் என குறிக்கப்பட்டுள்ளார்.
கருவூர் கொல்லி மாநகரை தலைநகராக கொண்ட சேர மன்னனான குலசேகரர் கொங்கர் கோமான் என்று அழைக்கப்பட்டார். பார்க்கவ குலத்தவர்களும் கொங்கராயர் என்ற பட்டம் உடையவர்கள்.
சுருதிமான் என்பதன் முழுமையான அர்த்தம் எல்லாவற்றிலும் சிறந்தவர் என்பதே. சுருதிகளில்,போர் பயிற்சிகளில் தேர்ந்தவர்.
அதே போல் குலசேகர ஆழ்வாரும் சுருதிகளில் தேர்ந்தவராயும்,போர் செய்வதில் வல்லமை உடையவராயும் வரலாற்றில் காணப்படுகிறார்.
ராம காதையால் ஈர்க்கப்பட்டு திருவாய் திருமொழி என்ற பாடல்களை ஆழ்வார் பாடியுள்ளார். இவரின் வீரத்தை கண்டு பாண்டியன் தன் மகளை இவர்க்கு மணம் செய்வித்ததாக அறிய முடிகிறது. ஆழ்வாரது பாடல்கள் பெருமாள் திருமொழி என்று அழைக்கப்படும்.
சுருதிமான் குலசேகரரும் பாண்டியன் மகளை மணந்ததாக உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக குலசேகர ஆழ்வார் பக்தி காரணமாக
"ஆனான செல்வத்துஅரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்” என்று கூறி நாடு துறந்து துறவு பூண்டு திருவரங்கம் சென்றார். சுருதிமான் குலசேகரரும் பக்தி காரணமாக நாடு துறந்து துறவறம் பூண்டு திருக்கோவில்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அநேக ஒற்றுமை உள்ள இருவரது வரலாறும் இருவரும் ஒருவரே என்பதை தெளிவாக உணர்த்தும்.
பார்க்கவ வம்சத்தில் சைவ மதம் வலிமை பெற்று விளங்கிய காரணத்தாலும் அனைவரும் தீவிர சைவர்கள் ஆக இருந்ததாலும் சுருதிமான் குலசேகரனே குலசேகர ஆழ்வார் என்ற தகவல் வெளிப்படுத்தப்படவில்லை. தலையாய காரணமாக வன்னியப் பட்டம் கொண்ட காரணத்தால் அறியாமையாக வன்னிய இனக்குழுவில் இணைக்கப்பட்ட நம் மக்களின் சிலரது உரிமையைக் கொண்டே சேரமான் குலசேகரரை அவ்வினத்தோர் உரிமைகொள்ளும் படி ஆனது. அன்றைக்கு சூழலில் அந்நியரின் அரசியல் வழி நடத்தலால் பார்க்கவர்களும் குலப்பெருமை கோராது அறியாமையாக வாளாதிருந்திருக்கின்றனர்.
குலசேகரர் என்றால் குலத்தின் சிகரமானவர் என்று பொருள் உண்டு. குலத்தின் சிகரமான ஆழ்வாரை,நம் மலையமான்கள் அருமை உணராது உரிமைகோராது இருந்து கொண்டனர். அதே வேளையில் (வன்னியர் பட்டத்தால்)வேற்று இனக்குழுவில் அறியாமையால் இணைந்த நம் உடையார் இன மக்களின் மூலமாக குலசேகர ஆழ்வாரை குல உயர்வு செய்தே ஆக வேண்டிய நிலையில் அன்றைக்கு இருந்தோர் சத்திரிய பெருமை வேண்டி தமது இனம் என்று உரிமை கூறிக் கொண்டனர். ஏனெனில் நம் பார்க்கவ குல அரசர்களை உரிமை கோரினால் மட்டுமே சத்திரியர் என்று பட்டம் பெற முடியும்.
மனிதரில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எங்கும் இல்லை. சாதி இரண்டொழிய வேறில்லை.
இட்டார் பெரியார் ,இடாதோர் இழி குலத்தார்.
சேரமான் பெருமாள் அனைவருக்கும் பொதுவானவரே.
ஆனால் சுருதிமான் குலசேகர ஆழ்வாரே நம் குல முதல்வர் என்பதையும் மலையமானின் பார்க்கவ குல மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன்
எங்கள் குலசே கரனென்றே கூறு.
ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை
வீரங் கெடுத்தசெங் கோல் கொல்லி காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசேகரன்முடி வேந்தர் சிகாமணியே.